டிஜிட்டல் துறையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றம் தரவு நிர்வாகத்தின் களஞ்சியமாக உருவெடுத்துள்ளது: பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா
டிஜிட்டல் துறையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றம் தரவு நிர்வாகத்தின் களஞ்சியமாக உருவெடுத்துள்ளதாக பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தெரிவித்துள்ளார். புள்ளியியல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் உரையாற்றியனார்.
பேராசிரியர் பிரசந்தா சந்திரா மஹாலானோபிசின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய டாக்டர் பி கே மிஸ்ரா, நாட்டைக் கட்டமைப்பதற்கான புள்ளியியல் தரவுகள் அடிப்படையிலான முறையை செயல்படுத்துவதில் அவர் அளப்பரிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
2026 – 31 காலம் வரையிலான தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ள மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
தரவுகள் அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவர் சுட்டிக்காட்டினார். நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ற தரவு தொகுப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் என்பதே இந்த ஆண்டின் புள்ளியியல் தினக் கருப்பொருளாகும். இது, குறித்த நேரத்தில் இந்தியாவின் புள்ளியியல் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் சான்றுகள் அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்குவதற்குமான முக்கிய நடவடிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.


இந்தியாவின் புள்ளியியல் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள நவீனமயமாக்கல் குறித்து பேசிய அவர், காலாவதியான தரவுத் தொகுப்புகள், தரவு பகுப்பாய்வில் ஏற்படும் காலதாமதம், வலுவில்லாத புள்ளியியல் தரவு கட்டமைப்புகள், சமச்சீரற்ற தரவுகளின் தரம் போன்றவை காரணமாக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக கூறினார்.
இதனை கருத்தில்கொண்டு துறைசார்ந்த நிபுணர்கள், முக்கிய நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விரிவான ஆலோசனைகளைப் பெற்று அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் தரவுத் தொகுப்பில் சிறந்த நடைமுறைகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அமல்படுத்தி வருவதாக கூறினார்.
நாட்டின் புள்ளியியல் சார்ந்த நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் அனைத்தையும் உள்ளடக்கிய சான்றுகள் அடிப்படையிலான வலுவான நிர்வாக நடைமுறைகளை உருவாக்குவதற்கு உதவிடும் என்று கூறினார்.
எதிர்காலத்தில் நிர்வாக நடைமுறைகள், முடிவெடுத்தல் ஆகிய அனைத்தும் தரவுத் தொகுப்பின் அடிப்படையில் இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான தரவுத் தொகுப்புகள், புள்ளியியல் சார்ந்த நடைமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், நாட்டின் வலிமை வாய்ந்த தேசிய சொத்தாக தரவுத் தொகுப்புகள் உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புள்ளியியல் பகுப்பாய்வு, கொள்கைகளை வகுப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை முறையாக பயன்படுத்தி, வலுவான நிர்வாக நடைமுறைகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இறுதியாக தொழில்நுட்பம் மட்டுமின்றி நிர்வாகம் சார்ந்த நம்பகத்தன்மை மிக்க தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.
வலுவான நிறுவன அடிப்படையிலான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், தரவுகளின் தரநிலை, தனிநபர் ரகசியம், வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளை உறுதி செய்ய முடியும் என்று டாக்டர் பி கே மிஸ்ரா தெரிவித்தார்.